கடந்த 42 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் மட்டும் அல்லாமல் இந்தியத்திரை உலகிலேயே ஒரு முக்கியமான இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். அவர் தன்னோட படங்களுக்கு எப்படி கதையைத் தேர்ந்தெடுக்கிறாருன்னு பாருங்க. இதுகுறித்து அவரே சொன்ன தகவல் இதுதான்.
ஒரு படத்துக்குக் கதையைத் தேர்ந்தெடுக்குறது இருக்கே. அது தலையைப் பிச்சிக்கிற விஷயம். சில சமயங்கள்ல திடீர்னு ஒரு ஐடியா வரும். மெல்ல மெல்ல அதைப் பற்றியே யோசிச்சிக்கிட்டு இருப்பேன். அதையே படமா எடுத்தால் என்னன்னு தோணும். அப்படிப்பட்ட கதைகளைப் படமா எடுக்கும்போதுதான் மிகுந்த கவனம் தேவை.
ஏன்னா இந்த நிமிஷத்துல நமக்குப் பிடிக்கிற விஷயம் இன்னும் ஒரு வருஷம் கழிச்சி தியேட்டருக்குப் போற வரைக்கும் நமக்குப் பிடிச்சிருக்கணும். அந்தக் கதை மேல அதே ஆர்வம், அதே காதல் இருக்கணும். நடுவுல இந்த ஆர்வம் விட்டுப்போச்சுன்னாலோ, இல்ல கொஞ்சம் குறைஞ்சாலோ நிச்சயமா அந்தப் படம் ஜெயிக்காது.
அதுமட்டும் இல்லாம நாம சொல்லப்போற கதை எல்லாருக்கும் பிடிச்சதா அமையணும். அது இதுவரைக்கும் நம்மோட முந்தையப் படங்களின் சாயல் இல்லாத ஒரு கதையாக இருக்கணும். சில விஷயங்கள் பளிச்சுன்னு தோணும். அது அப்படியே வளர்ந்துப் பூத்துப் போகும். சில விஷயங்கள் மனசிலேயே கிடக்கும்.

நாயகன் டைம்ல யோசிச்சதுதான் அஞ்சலி. நாலு வருடங்களுக்குப் பின்னாலதான் அந்தப் படத்தையே எடுத்தேன். அப்படி இருந்தும் அது ஜெயிச்சதுன்னா அதுக்குக் காரணம் அந்தக் கதையில இருந்த வீரியம்தான் என்று தெரிவித்துள்ளார் மணிரத்னம்.
தற்போது மணிரத்னம் கமல், சிம்பு நடிப்பில் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்துக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். வரும் ஜூன் 5ம் தேதி படம் ரிலீஸ்.