கவுண்டமணி – செந்திலுக்கு பின் தமிழ் சினிமாவில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் வடிவேலு. ராஜ்கிரண் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் சில காட்சிகளில் நடித்திருப்பார். அதன் சின்னக் கவுண்டர், கோவில் காளை என கவுண்டமணி – செந்திலுடன் சில காட்சிகளில் வருவார்.
தேவர் மகன் படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடத்தை கொடுத்தார் கமல். அதன்பின் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். பெரும்பாலும் கிராமப்புற கதைகளில் அதிகம் நடித்தார். ஏனெனில், வடிவேலுவின் முகம், குரல் மற்றும் உடல் மொழிக்கு அதுதான் செட் ஆனது. அப்படி நடித்து வைகைப்புயல் என்கிற பட்டமும் கிடைத்தது.
ஒருகட்டத்தில் காதலன், காதல் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து நகர்புறக் கதைகளிலும் நடித்து பிரபலமானார். கவுண்டமணி சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட வடிவேலு முன்னணி காமெடி நடிகராக மாறினார். கவுண்டமணி போலவே ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் என சம்பளம் வாங்கினார் வடிவேலு.

காமெடி நடிகராக இருந்தாலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி இருக்கிறார். எம்டன் மகன் உள்ளிட்ட பல படங்களிலும் வடிவேலுவிடம் இந்த நடிப்பை பார்க்க முடியும். குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த அரசியல்வாதியாக அசத்தி இருந்தார். அழும் காட்சிகளிலும், இயலாமையை காட்ட முடியாமல் மகனிடம் தவிக்கும் வேடத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் வடிவேலுவுக்கு இனிமேல் காமெடி எடுபடாது. இதுபோல குணச்சித்திர வேடங்களில் நடிக்கலாம் என கூறினார்கள். ஒருபக்கம், சுந்தர்.சியுடன் இணைந்து கேங்கர்ஸ் என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கேங்கர்ஸ் புரமோஷன் தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர்.சி மாமன்னன் பட பெயரை சொல்லாமல் ‘வடிவேலு அண்ணன் ஒரு சீரியஸான வேடத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், காமெடி எல்லோராலும் செய்ய முடியாது. வடிவேலு அண்ணனின் அடையாளமே காமெடிதான். எனவே, அந்த வேடத்தில் அவர் நடித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை’ என சொல்லி இருக்கிறார்.