வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. பிரசாந்த் அறிமுகமான இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். ஆனால், சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆன்மிக பாடல்களை கொண்ட கேசட்டுக்களை உருவாக்கி வந்தார்.
சினிமாவுக்கு வந்தபின் பல படங்களுக்கும் இசையமைத்தார். இளையராஜா பக்கம் போவதை பல இயக்குனர்கள் நிறுத்தியிருந்த நேரம், மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் புதுவிதமான ஒலியில் பாடல்களை கொடுத்து அசத்திக்கொண்டிருந்தார். எனவே, குறைவான சம்பளத்தில் இசையமைத்து வந்த தேவா பக்கம் பல இயக்குனர்களும் போனார்கள்.
பாலச்சந்தர், வஸந்த், சேரன், சுரேஷ் கிருஷ்ணா போன்ற 90களில் பெரிய இயக்குனர்களாக இருந்தவர்களே தேவா பக்கம் போனார்கள். மேலும், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சரத்குமார், சத்தியராஜ் என 90களில் ஹீரோவாக நடித்த எல்லோரின் படங்களிலும் தேவா இசையமைத்தார்.
அந்த காலகட்டத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இவராகத்தான் இருப்பார். அஜித் நடித்து வெளியான ஆசை படத்தில் தேவா போட்ட பாடல்களை கேட்டு நிறைய பேர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றே நினைத்தார்கள். ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களில் இனிமையான பாடல்களை போட்டு கொடுத்தார் தேவா.

கடந்த 15 வருடங்களாக சினிமாவில் தேவா இசையமைப்பதில்லை. ஆனால், அவரின் மகன் ஸ்ரீகாந்த் தேவா நிறைய படங்களுக்கு பின்னணி இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய தேவா ‘எனக்கு இசை மீது ஆர்வம் வந்ததற்கு காரணமே அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன்தான். ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு ஒரு பாட்டை வாசித்து காட்டினார். அவர் பேசிய விதம், வாசித்து காட்டிய விதம் எல்லாம் எனக்கும் பிடித்துப்போனது. இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையே எனக்கு அவரை பார்த்துதான் வந்தது.
என் வீட்டிலிருந்து லஸ் ஏரியாவுக்கு சைக்கிள் வந்து ஒரு இடத்தில் நிற்பேன். அவரின் கார் சாந்தோமிலிருந்து வரும். காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் அவரை பார்ப்பதற்காகவே தினமும் போவேன். அவர்தான் என் இசைக்கடவுள்’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.