கார்த்தியை வைத்து சிறுத்தை படம் இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர்தான் சிவா. முதல் படமே ஹிட் என்பதால் கவனிக்கப்பட்டார். அதன்பின் அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். இந்த படமும் ஹிட். அதோடு, சிவாவை அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. எனவே, வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அவரின் இயக்கத்தில் நடித்தார்.
இதில் விவேகம் மட்டுமே சரியாக போகவில்லை. ஆனால், இப்போதும் அஜித்தின் குட் புக்கில் இருக்கும் இயக்குனர் இவர். சிவா இயக்கிய விஸ்வாசம் திரைப்படம் ரஜினியின் பேட்டை படத்தோடு வெளியாகி அந்த படத்தை விட அதிக வசூல் செய்தது. இது ரஜினிக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
எனவே, அவரை அழைத்து பேசி அவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அப்படி உருவான படம்தான் அண்ணாத்த. ஆனால், அந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் சூர்யாவிடம் ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு கதை சொன்னார். அதுதான் கங்குவா. அதிக பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கினார் சிவா.

சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுப்பது என முடிவு செய்தனர். சூர்யாவும் அதிக உழைப்பை இந்த படத்திற்காக போட்டார். கொடைக்கானல் பகுதிகளில் உள்ள காடுகளில் இப்படத்தை எடுத்தார்கள். பெரும் உழைப்பை போட்டு எடுக்கப்பட்ட இந்த படம் இந்திய அளவில் பலராலும் பேசப்படும் என சிவாவும், சூர்யாவும் நினைத்தார்கள்.
ஆனால், முதல் காட்சி வெளியான உடனேயே சூர்யாவை பிடிக்காத சிலர் வன்மத்தை கக்கி படம் நன்றாக இல்லை என சொன்ன வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக கங்குவா படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இந்த் படத்தின் தோல்வி சிறுத்தை சிவாவை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது. எனவே, இதுவரை அவர் அடுத்த படத்தை துவங்கவில்லை.
ஒருபக்கம், சிவாவின் அலுவலகம் சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வந்தது. கங்குவா படம் ஊத்திகொண்டதால் ராசி இல்லை என கருதிய அவர் இப்போது அந்த அலுவலகத்தை காலி செய்துவிட்டாராம். அவரின் வீரம், வேதாளம், விஸ்வாசம் படமெல்லாம் ஹிட் அடித்த போது கங்குவாவுக்கு மட்டும் ஏன் ராசி பார்க்கிறார் என தெரியவில்லை. ‘கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா?’ என்கிற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.