வில்லனாக தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்து கதாநாயகனாக உயர்ந்தார் சத்யராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சினிமாவுல நடிக்க வேண்டும் என்ற தாகத்தோடும் சென்னை வரும்போது அவருக்குக் காசு கொடுத்து அனுப்ப வீட்டில் யாரும் தயாராக இல்லை. அந்த நேரத்தில் அவர் கையில் 5000 ரூபாய் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தவர்தான் மாதம்பட்டி சிவகுமார்.
அவர்தான் பின்னாளில் சின்னத்தம்பி, பெரியதம்பி உள்பட பல படங்களைத் தயாரித்தவர். அவரது மகன் சத்யன்தான் இன்று தமிழ்சினிமா உலகில் நகைச்சுவை நாயகனாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.
அன்றைய காலகட்டத்தில் கையில் 500 ரூபாய் இருந்தால் கிட்டத்தட்ட ஒரு மாசத்தை சென்னையில் தாராளமாக ஓட்டிடலாம். ஏறக்குறைய 10 மாதம் சென்னையில தங்கி இருக்கக்கூடிய அளவுக்கு சென்னை வந்து இறங்கினார் சத்யராஜ். அவர் வரும்போது சிவகுமாரிடம் உதவியாளராக இருந்த திருப்பூர் மணி சிவகுமார் கதாநாயகனாக நடிக்க கண்ணன் ஒரு கைக்குழந்தை படத்தைத் தயாரித்துக் கொண்டு இருந்தார்.

அந்த நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றும் வாய்ப்பு சத்யராஜிக்குக் கிடைத்தது. அந்த நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றியபோது ஒளிப்பதிவாளர் எம்.கே.விஸ்வநாதனின் அறிமுகம் கிடைத்தது. அதன் காரணமாக சட்டம் என் கையில் படத்தில் சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு சத்யராஜிக்குக் கிடைத்தது.
கையில் 5000 ரூபாயுடனும், சினிமாவிலே நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் வந்தவர்தான் சத்யராஜ். இன்றைக்கு தமிழ் சினிமா உலகிலும், இந்திய சினிமா உலகிலும் எப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறார் என்பது நீங்கள் அறிந்த விஷயம். அதற்குப் பின்னால் இருப்பது சத்யராஜின் அபார நடிப்புத்திறனும், உழைப்பும். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.