தனுஷ் தயாரித்து இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இந்தப் படத்திற்காக தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே படப்பிடிப்பு நீண்ட நாள்களாக நடைபெற்று வருகிறது. நித்யா மேனன் தனுஷின் ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர் 1க்கு தள்ளி வைத்துள்ளனர். இந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷின் இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக ஆண்டிப்பட்டியில் பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதாவது ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அனுப்பப்பட்டியில் கடந்த 20 நாள்களாக செட் போடப்பட்டு சூட்டிங் நடந்துள்ளது. தொடர்ந்து அடுத்தக்கட்டமாக படப்பிடிப்பு வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் படக்குழுவினர் செட்டைப் பிரிக்காமல் சென்று விட்டனர். இந்த நிலையில் திடீரென செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக பணியாற்றினர். படக்குழுவினர் அனைவரும் அந்த நேரத்தில் அங்கு இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தனுஷ் உள்பட படக்குழுவினர் யாரும் அங்கு இல்லை என தகவல் வந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கிலும் நடந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.