Vijay: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு முழுவதுமாக அரசியலில் இறங்குகிறார் விஜய். அதனால் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது அவர் நடித்து சுமாரான வரவேற்பை பெற்ற சச்சின் திரைப்படத்தை கலைப்புலி தாணு ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்.
ரீ ரிலீஸில் எதிர்பாராத லாபம் வந்ததாகவும் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் ரீ ரிலீஸ் செய்ததை விஜயிடம் தெரிவிக்கவில்லை என்றும் தாணு கூறினார். இந்த நிலையில் தெறி படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை தாணுவின் மூத்த மகன் பரந்தாமன் என்பவர் கூறினார். பரந்தாமனும் தாணுவுடன் இணைந்து புரடக்ஷனை பார்த்துக் கொள்கிறாராம்.
அந்த வகையில் ஒரே நேரத்தில் கபாலி மற்றும் தெறி போன்ற படங்களை பரந்தாமன் தான் கவனித்தாராம். அப்போது தெறி படத்தில் பஸ் ஆக்ஸிடண்ட் காட்சி வரும். அந்த நேரத்தில் இரண்டாயிரம் பேர் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். அப்போ உதவி இயக்குனர் அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டிடம் ஏதோ தவறாக பேச கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாம்.
கொஞ்சம் விட்டிருந்தால் பெரிய சண்டையே வந்திருக்குமாம். ஆனால் இது விஜய்க்கு தெரியாதாம். உடனே இந்த விஷயத்தை பரந்தாமனிடம் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது பரந்தாமன் கபாலி பட சூட்டிங்கில் இருந்தாராம். உடனே இருந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அனைவருக்கும் ஒரு பஸ் ஏற்பாடு செய்து கொடுத்து கூடவே பிரியாணி பாக்கெட் ஒரு வாட்டர் பாட்டிலுடன் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தள்ளி நிறுத்துமாறு பரந்தாமன் கூறினாராம். ஏனெனில் அது மதிய இடைவேளை.

உடனே பரந்தாமனும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாராம். அங்கு ஹீரோ, ஹீரோயின், ஸ்டண்ட் கலைஞர்கள் , கேமிரா மேன்கள் இவர்கள் இருக்க இந்த விஷயத்தை அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததும் சைரனுடன் கூடிய கார் வந்து விஜயை அழைத்துக் கொண்டு போய்விட்டார்களாம். ஸ்பாட்டில் பரந்தாமன் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள்தான் இருந்தார்களாம். விஜய்க்கு உதவியாக ராஜேந்திரன் என்பவரை பரந்தாமன் அனுப்பியும் வைத்திருக்கிறார்.
நடந்த விஷயம் அரசல் புரசலாகத்தான் விஜய்க்கு தெரியுமாம். நீ எதுக்கு என் கூட வருகிறாய்? பரந்தாமன் எங்கே என்று விஜய் அந்த ராஜேந்திரனிடம் கேட்க ‘உங்களுக்கு துணையாக என்னை அவர் போக சொன்னார்’ என அந்த ராஜேந்திரன் கூறினாராம். உடனே விஜய் ‘என்னை நம்பித்தான் பரந்தாமனை அவரது அப்பா தாணு அனுப்பி வைத்தார். அவருக்கு நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என சொல்லி ராஜேந்திரனை அந்த ஸ்பாட்டுக்கு அனுப்பிவிட்டாராம் விஜய்.இதை தாணுவின் மகன் பரந்தாமன் ஒரு பேட்டியின் போது கூறினார்.