ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்துள்ளார். இம்மாதம் 16ஆம் தேதி, அமலாக்கத்துறை அந்த இரண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது. இதில் அந்த நிறுவனங்கள், 5 கோடி 90 லட்சம் ரூபாயை நடிகர் மகேஷ்பாபுவிற்கு கட்டணமாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தொகையில் 3 கோடி 40 லட்சம் ரூபாய் செக்காகவும், 2 கோடி 50 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும் மகேஷ்பாபு பெற்றுக்கொண்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில், இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விளம்பரத்தில் நடித்தததற்காக பணம் பெற்றுள்ளார், இதில் என்ன தவறு என்கிறீர்களா?. அதாவது சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதுதான் தற்போது பிரச்சினை. எப்படி என்றால், அங்கீகாரம் அளிக்கப்படாத வீட்டு மனைகளை விற்றது, ஒரே வீட்டு மனையை பலருக்கு விற்பனை செய்வதாக தவறான உத்திரவாதம் அளித்தது என பல மோசடிகளை செய்து முன்கூட்டியே அந்த நிறுவனம் பல கோடி ரூபாயை சுருட்டியிருக்கிறது.

இந்த மோசடி நடைமுறைகளை அறியாமல் நடிகர் மகேஷ்பாபு அந்த நிறுவன விளம்பரங்களில் நடித்து அந்த நிறுவனத்தில் பலரை முதலீடு செய்ய தூண்டியதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் நடிகர் மகேஷ்பாபு நேரடி தொடர்பு இல்லை என்றாலும் அவர் பெற்ற பணம் மோசடியில் இருந்து கிடைத்ததா என்று அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அதனாலேயே அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் மகேஷ்பாபு வசமாக சிக்கிக்கொண்டாரா என அவரது ரசிகர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
பாகுபலி புகழ் ராஜமௌலி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபு தற்போது நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்தியாவில் இல்லாமல், அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தநிலையில் இப்படியான சிக்கலில் நடிகர் மகேஷ்பாபு மாட்டிக்கொண்டுள்ளார்.