தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் நேற்று கலந்துகொண்ட நிகழ்வில் ஆற்றிய உரை தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க பரவி வருகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் அரசியல் விழிப்புணர்வு வளர்ந்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட விஜய், எதிர்க்கட்சிகளுக்கும் நேரடியான செய்தியொன்றை அனுப்பினார்.
திருச்சியில் CM விஜய் என்ன பேசினார்?
மக்கள் அரசியலில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், “முன்பு சட்டசபையில் யார் என்ன செய்தாலும் பொதுமக்களுக்கு அக்கறை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. சட்டசபையில் என்ன நடக்கிறது, யார் என்ன பேசுகிறார்கள் என்று மக்கள் கவனமாக கண்காணிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய விஜய், “திமுக ஸ்டைலில் சொல்லணும்னா, முன்பு ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் இப்போது செய்திகளை தொடர்ந்து கவனிக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியும், பெருமையும் தரும் விஷயம்” என்று நெகிழ்வுடன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு விஜய் கொடுத்த பதில் என்ன?
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சியினர் மக்களை “தற்குறி” என்று கூறியதை நேரடியாக சுட்டிக்காட்டிய விஜய், “மக்களை அவமதித்தவர்களின் அரசியல் எதிர்காலத்தையே அதே மக்கள் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள். இன்னும் ஆக்கப்போகிறார்கள்” என்று உறுதியான தொனியில் பேசினார்.
“உண்மையை சொன்னால் சிலருக்கு கசக்கும். மக்களின் மனநிலையை உண்மையாக புரிந்திருந்தால் இப்படிப்பட்ட தவறான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

நிகழ்வை நிறைவு செய்த விஜய், தன்னோடு இதயபூர்வமான தொடர்பு வைத்திருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும், மக்களாட்சியை வலுப்படுத்திய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.விஜய்யின் இந்த உரை அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.